Published : 03 Apr 2018 07:31 AM
Last Updated : 03 Apr 2018 07:31 AM
தலித் விவகாரங்களை பேச காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தார்மீக உரிமை இல்லை என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
இது தொடர்பாக அவர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தலித் சமூகத்தினருக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அக்கட்சியின் நீண்ட ஆட்சியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அம்பேத்கரின் படம் வைக்க இடம் மறுக்கப்பட்டது. பிறகு 1989-ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அம்பேத்கர் படம் வைக்கப்பட்டது. நடிகர்கள் உட்பட பலருக்கு காங்கிரஸ், பாரத ரத்னா விருது வழங்கியது. ஆனால் அம்பேத்கருக்கு வழங்கவில்லை. பிறகு 1990-ல் வி.பி.சிங் ஆட்சியில்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
தலித் விவகாங்கரங்களை பேச ராகுல் காந்திக்கு தார்மீக உரிமை இல்லை. அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது. பிறர் அவமதிப்பதை ஊக்குவித்துள்ளது” என்றார்.
பாஸ்வான் மேலும் கூறும்போது, “வன் கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு வெறும் 11 நாட்களில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அரசியல் கட்சிகள் இதனை அரசியலாக்க வேண்டாம்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT