அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு: பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

Published on

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினத்தில் அமலாக்கத்துறை, கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கேஜ்ரிவால் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in