Published : 04 May 2024 06:49 AM
Last Updated : 04 May 2024 06:49 AM

மத்திய பிரதேச ஆசிரமத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது

கோப்புப்படம்

போபால்: மத்திய பிரதேச ஆசிரமத்தில் படித்துவந்த மைனர் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ஆசிரியர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உஜ்ஜைன் எஸ்.பி. பிரதீப் சர்மா கூறியுள்ளதாவது:

மாநில சமஸ்கிருத வாரியத்துடன் இணைக்கப்பட்ட உஜ்ஜைன் ஆசிரமத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பண்டிதராவதற்கு படித்து வந்துள்ளனர். இதில் ஒரு சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக 10 நாட்களுக்கு முன்பாக அவரது தாயாரிடம் புகார் தெரிவித்துள்ளான்.

இதேபோன்று மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்ததையடுத்து ஆசிரமத்துக்கு நேரடியாக அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் அந்த ஆசிரமத்தின் ஆசிரியர் ராகுல் சர்மா (21), ஆசிரம பராமரிப்பாளர் அஜய் தாக்குர் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு பிரதீர் சர்மா தெரிவித்தார்.

ஆசிரம அதிகாரி மறுப்பு: ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆசிரம அதிகாரி கஜானந்த் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பெற்றோர்கள் ஆசிரமத்துக்கு வந்து தகராறு செய்ததால் எங்களுக்கு உதவவே போலீஸாரை அழைத்தோம். ஆனால், அவர்கள் எங்கள் ஊழியர்கள் மீதே வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’’ என்றார்.

கடந்த 2023-ம் ஆண்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மைனர் பெண் ஒருவர் ரத்தப் போக்குடன் கிழிந்த ஆடைகளுடன் தெருவில் உதவி கோரிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அந்தப் பெண் உதவி கேட்டு ஒரு மணி நேரம் சுற்றி அலைந்த போதும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பதிலாக அந்த மைனர் பெண்ணை விரட்டியடித்தனர்.

அப்போது, உஜ்ஜைனி ஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த ராகுல் சர்மாதான் அந்தப் பெண்ணுக்கு உதவியதாக கூறப்படுகிறது. தற்போது அவர்தான் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x