Published : 04 May 2024 07:12 AM
Last Updated : 04 May 2024 07:12 AM

கோடை காலம் முழுவதும் விஐபி தரிசன சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்

கோப்புப்படம்

திருப்பதி: இந்த கோடைகாலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஒரு மணி நேரத்தில் 30 பக்தர்கள் தங்கள் கருத்துகளை தர்மா ரெட்டியிடம் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கோடை விடுமுறை காரணமாக சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆதலால், கோடைகாலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. மாட வீதிகள் அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், மாடவீதிகள், நாராயணகிரி பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனுமன் ஜெயந்தி உற்சவம் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மாணவி ஒருவர் 10,01,116 கோவிந்த நாமங்களை பயபக்தியுடன் எழுதிக் கொண்டு வந்து காண்பித்தார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விஐபி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.

மே 17 முதல் 19-ம் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் திருமலையில் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. மே 22-ம் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாள் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.

ரூ.101.63 கோடி காணிக்கை: கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.17 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். இதில் 8.08 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 39.73 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 94.22 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சுவாமி உண்டியலில் ரூ.101.63 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x