ராகுலை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம்: மோடி விமர்சனம்

ராகுலை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம்: மோடி விமர்சனம்
Updated on
2 min read

குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி குஜராத்தின் ஆனந்த், போர்பந்தர், ஜாம்நகர், பதான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் ஒரே இரவில் முஸ்லிம்கள் அனைவரும் ஓபிசி பிரிவினர் என்று அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. நான் உயிரோடு இருக்கும்வரை மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன்.

அரசமைப்பு சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான பிறகும் நாட்டில் 2 அரசமைப்பு சாசனங்கள், 2 கொடிகள் இருந்தன. பாஜக ஆட்சியில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் ஒரே அரசமைப்பு சாசனம் அமலுக்கு வந்திருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வந்தது. பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதன்காரணமாக ஒரு காலத்தில் கையில் வெடிகுண்டை வைத்திருந்த பாகிஸ்தான், தற்போது பாத்திரத்தை கையில் ஏந்தி தர்மம் கேட்கிறது. பாரதத்தில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்ய மன்றாடி வருகிறது.

காங்கிரஸின் இளவரசரை (ராகுல் காந்தி) பாரதத்தின் பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இங்கு காங்கிரஸ் அழிந்து வருகிறது. இந்த துக்கம் தாளாமல் பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. காங்கிரஸ், பாகிஸ்தான் இடையிலான ஆழமான நட்பு அம்பலத்துக்கு வந்துள்ளது.

பாரதத்தின் எல்லைப் பகுதிகளில் எத்தனை தீவுகள் உள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. நான் பதவியேற்ற பிறகு செயற்கைக்கோள்கள் மூலம் தீவுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது தீவுகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல உள்ளது. சில நாட்களுக்கு முன்பு 'வோட் ஜிகாத்தில்' அனைத்து முஸ்லிம்களும் பங்கேற்க வேண்டும் என்று இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கருத்துக்கு இண்டியா கூட்டணியின் எந்தவொரு தலைவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

மக்களவை பிளவுபடுத்த முயற்சி செய்யும் காங்கிரஸுக்கு குஜராத் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in