Published : 03 May 2024 08:10 AM
Last Updated : 03 May 2024 08:10 AM

2ஜி அலைக்கற்றை தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை பட்டியலிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: 2ஜி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நேற்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

“2ஜி தீர்ப்பில் தெளிவு கோரும் போர்வையில் அதில் திருத்த செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறிய உச்ச நீதிமன்ற பதிவாளர், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட மறுத்துள்ளார்.

2008-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திமுக மூத்த தலைவர் ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் மிகப் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவ்வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது.

தற்போது புதிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி கடந்த மாதம் மனுதாக்கல் செய்தது.

அதாவது, ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்நிலையில், அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நோக்கில் மட்டுமல்லாமல், தேசப்பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதால் ஏல முறைக்குப் பதிலாக நிர்வாக நடைமுறைகள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் மத்திய அரசு கோரியது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க போதிய காரணங்கள் இல்லை என்று கூறி விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்ற பதிவாளர் மறுத்துள்ளார்.

பாஜகவின் இந்த மனு குறித்து சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அப்போது பாஜக வலியுறுத்தியது. ஆனால், இப்போது தங்கள் வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடுசெய்வதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோருகிறது. மோடி அரசின் பாசாங்குக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது” என்று விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x