Last Updated : 27 Apr, 2014 12:00 PM

 

Published : 27 Apr 2014 12:00 PM
Last Updated : 27 Apr 2014 12:00 PM

ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பெண் எம்.எல்.ஏ.க்கள்

மக்களவைத் தேர்தலில் பிஹார் முதல்வர் நிதஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க, அக்கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய பெண் எம்.எல்.ஏ.க்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிஹார் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிதிஷ் குமார் அமல்படுத்தியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட 24 பெண்களுக்கு அவர் வாய்ப்பளித்தார். அதில், 20 பெண்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், அவரின் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட 5 பெண் எம்.எல்.ஏக்கள், அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். நிதிஷ் அரசில் அமைச்சராக இருந்த பர்வீன் அமானுல்லா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர், பாட்னா சாஹிப் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

எம்.எல்.ஏ.க்கள் ரேணு குமாரி, பூனம் தேவி, சுஜாதா குமாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்களை கடந்த 19-ம் தேதி கட்சியிலிருந்து நிதிஷ் குமார் நீக்கினார்.

மாதேபுரா தொகுதியில் போட்டியிடும் தனது கணவர் விஜய்குமார் மண்டலுக்கு ஆதரவாக ரேணு குமாரி பிரசாரம் செய்து வருகிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் ககரியா தொகுதியில் போட்டியிடும் தனது தங்கை கிருஷ்ணாவுக்கு ஆதரவாக பூனம் தேவி வாக்கு சேகரித்து வருகிறார். சுஜாதாவின் கணவர் விஸ்வ மோகன் எம்.பி.க்கு சுபோல் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், இருவரும் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மற்றொரு எம்.எல்.ஏ.வான அன்னு சுக்லாவுக்கு, அவர் விரும்பிய வைசாலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வில்லை. சிறையில் இருக்கும் கிரிமினல் அரசியல்வாதியான முன்னா சுக்லாவின் மனைவியான அன்னு, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி வைசாலியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகிய இந்த 5 பெண்களும் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x