Published : 11 Apr 2018 08:25 PM
Last Updated : 11 Apr 2018 08:25 PM
மும்பையில் போலீஸ் ரெய்டுக்கு பயந்து, 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற பெண் பாலியல் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறுப்படுவதாவது:
மும்பையின் தெற்குப்பகுதியில் உள்ள கிராண்ட் ரோட் பகுதியில் உள்ள டி மார்க் சாலையில் ஒம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிடி மார்க் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸார் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் ரெய்டுக்கு சென்றனர்.
அங்கு சென்று ஒவ்வொரு தளத்திலும் உள்ள வீடுகளை சோதனையிட்டு வந்தனர். அப்போது 3-வது தளத்தில் இருந்த பெண்கள் போலீஸ் வருவதைக் கண்டு பதற்றமடைந்தனர். அவர்கள் மாடியில் இருந்து கீழே படிவழியாக தப்பிக்க முயன்றபோது, அங்கும் போலீஸார் இருப்பதைக்கண்டனர். இதனால், என்னசெய்வது என்று அவர்களுக்கு தெரியாமல் பதற்றமடைந்தனர். போலீஸாரின் ரெய்டுக்கு பயந்த பெண் பாலியல் தொழிலாளர்கள் இருவர் 3-வது மாடியில் இருந்து கயிறு மூலம் ஜன்னல் வழியாக கீழே இறங்குவதற்கு முயற்சித்தனர். அப்போது தவறி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்த 2 பெண்களையும் பைகுல்லா பகுதியில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இரு பெண்களும் உயிரிழந்தனர். இதில் ஒரு பெண்ணுக்கு 50 வயதும், மற்றொரு பெண்ணுக்கு 30வயதும் இருக்கும். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT