Published : 30 Apr 2024 06:25 AM
Last Updated : 30 Apr 2024 06:25 AM

கர்நாடகாவுக்கு ரூ.3,499 கோடி வறட்சி நிதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: கர்நாடகாவுக்கு வறட்சி நிதியாக ரூ.3,499 கோடியை வழங்கி உள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுமார் 48 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 223 தாலுகாக்கள் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய குழு கர்நாடகாவில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த சூழலில் வேளாண் சாகுபடிபாதிப்பை ஈடுகட்ட ரூ.35,162 கோடி,தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.18,171 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு கேட்டது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட ரமணி கூறும்போது, ‘‘கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம் வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் வறட்சி நிதி வழங்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.

இதன்படி சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,499 கோடியை மத்திய அரசு வழங்கியது.

இந்த சூழலில் உச்ச நீதி மன்றத்தில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியதாவது:

கடந்த ஆண்டு மத்திய குழு கர்நாடகாவில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை விவரம் என்ன என்பது தெரியவில்லை. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.18,171 கோடி வழங்க கர்நாடக அரசு கோரியது.

ஆனால் மத்திய அரசு ரூ.3,499 கோடியை மட்டுமே வழங்கியிருக்கிறது. கர்நாடக அரசு கோரியதைவிட குறைவான தொகையை மத்திய அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு கபில் சிபல் வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கூறும்போது, “மத்திய அரசு சார்பில் கர்நாடகாவுக்கு முதல்கட்டமாக ரூ.3,499 கோடி வறட்சி நிதிவழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் ஆய்வு செய்த மத்திய குழுவழங்கிய பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய குழுவின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். வழக் கின் அடுத்த விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.18,171 கோடி வழங்க கர்நாடக அரசு கோரியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x