Published : 30 Apr 2024 06:32 AM
Last Updated : 30 Apr 2024 06:32 AM

சந்தேஷ்காலி வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிபிஐ விசாரணையை எதிர்ப்பது ஏன்? - மே.வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்

கொல்கத்தா; சந்தேஷ்காலி பாலியல் வன்முறை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை எதிர்ப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கு வங்த்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரும் அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் விளைநிலங்களை அபகரித்ததாகவும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பெண்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால், ஷாஜகான் ஷேக்கை திரிணமூல் காங்கிரஸ் 6 ஆண்டு இடைநீக்கம் செய்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கில்,ஷாஜகான் ஷேக், அவரது கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐவிசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை ஒத்திவைப்பு: இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாத்திட ஆர்வம் காட்டுவது ஏன்? சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதைஎதிர்ப்பது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து வழக்கை ஜூலைக்கு ஒத்தி வைத்தது.

அமலாக்கத்துறை சோதனை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் உடன் ஷாஜகான் ஷேக்கிற்கு தொடர்பிருப்பது தெரியவந்ததால் அவரது வீட்டை சோதனையிட அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜனவரியில் சந்தேஷ்காலி சென்றனர். அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x