Published : 03 Apr 2018 07:32 AM
Last Updated : 03 Apr 2018 07:32 AM

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை: அமைதி காக்க ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் நேற்று வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அனைத்து தரப்பினரும் அமைதி காக்க முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவால் வன்கொடுமை சட்டம் பயனற்று போகும் என்றும் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு நீதி வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் எனவும் அந்த சமூகத்தினரிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் வட மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறும்போது, “எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. எனவே நாட்டின் எந்தப் பகுதியிலும் சாதி அல்லது சமூக அடிப்படையில் வன்முறை நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வது அனைத்து அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தடையாக இருப்பதாக கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு ஆகும்” என்றார்.

இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள காரணங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே மத்திய சமூக நீதித்துறை சார்பில் விரிவான மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x