Published : 29 Apr 2024 06:43 PM
Last Updated : 29 Apr 2024 06:43 PM

“மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் பேச்சு நடத்தியது எதைக் காட்டுகிறது?” - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

சென்னை: “பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரை எலான் மஸ்க் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் (முன்பு ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக தகவல் வெளியானது. இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன் பிறகு, எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்தார். இதன் தொடர்ச்சியாக அவர், ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு திடீா் பயணம் மேற்கொண்டார். அதோடு, அந்நாட்டு பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டெஸ்லா கார் கம்பெனியின் அதிபர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவதற்கு நாள் குறித்திருந்தார். பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு இந்தியாவில் கார் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலையை அமைக்கும் முடிவை மஸ்க் அறிவிப்பார் என்று அரசு எதிர்பார்த்தது கடந்த வாரம் தன் இந்தியா பயணத்தை நாள் குறிப்பிடாமல் மஸ்க் ஒத்திவைத்தார். டெஸ்லா கம்பெனியின் "அவசர வேலைகளால்" பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது

ஆனால், நேற்று மஸ்க் சீனாவுக்குச் சென்றார், சீனப் பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். டெஸ்லா கம்பெனியின் நவீன ஓட்டுநனர் இல்லாத காரை சீனாவில் தயாரிப்பது பற்றி இருவரும் பேசினார்கள் என்று அறிவிக்கப்பட்டது. சீனாவில் மிகப் பெரிய கார் தொழிற்சாலையை மஸ்க் அமைப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்தியப் பயணத்தை ஒத்திவைத்து மஸ்க், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது எதைக் காட்டுகிறது? பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரைச் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x