ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

கடவுளுக்கு துரோகம் செய்கிறார் ராகுல்: ஸ்மிருதி இரானி விமர்சனம்

Published on

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் அடுத்த மாதம் 20-ம் தேதி 5-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் அமேதி தொகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அதற்கு முன்பாக அவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்து அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது: வயநாடு தொகுதியில் தேர்தல் முடிந்தவுடன் ராகுல் அமேதி வருவார் எனவும், அதற்கு முன்பு அவர் ராமர் கோயில் செல்வார் எனவும் கூறப்படுகிறது. ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை நிராகரித்தவர்கள், தற்போது ஓட்டுக்களை பெறுவதற்காக ராமர் கோயிலுக்கு செல்கின்றனர். இது கடவுளுக்கு செய்யும் துரோகம். அமேதி தொகுதியுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக ராகுல் கூறுகிறார்.

ஆனால் வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, வயநாடுதான் தனது இல்லம் என ராகுல் கூறுகிறார். நிறம் மாறும் நபரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் குடும்பத்தையே மாற்றும் நபரை நாம் இப்போது தான் பார்க்கிறோம். தாமரை சின்னத்துக்கு மக்கள் வாக்களித்தால், இலவச ரேஷன் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் உங்களின் சொத்துக்கள் கணக்கிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in