

புதுடெல்லி: இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவை இணைந்து கவச வாகனம் ஒன்றை பாராசூட் மூலம் ராஜஸ்தானில் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கியது.
இந்திய விமானப்படையில் உள்ள சி-17 குளோப்மாஸ்டர் விமானம் பாதுகாப்பு படைக்குபல வழிகளில் பயன்படுகிறது.சமீபத்தில் கடற்கொள்ளையர் களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல்ஒன்றை மீட்க இந்திய கடற்படை கப்பல் சென்றது.
கடற்படை கமாண்டோக்கள் செல்வதற்கு கூடுதலாக ரப்பர் படகுகள் தேவைப்பட்டன. அந்த ரப்பர் படகுகள் சி-17 விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அரபிக்கடலில் இந்திய கடற்படை கப்பல் அருகே வெற்றிகரமாக பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்டன.
அதேபோல் இந்திய ராணுவத்தின் பிஎம்பி கவச வாகனத்தை ராஜஸ்தானில் உள்ள மகாஜன் போர் பயிற்சி களத்தில் பாராசூட் மூலம் தரையிறக்க திட்டமிடப்பட்டது.
கவச வாகனம் போன்ற எடை அதிகம் உள்ள பொருட் களை பாராசூட் மூலம் தரையிறக்குவதற்காக 32 அடி நீளத்தில் வி-பிளாட்பார்ம் என்ற சாதனத்தை பாதுகாப்பு படையின் ஏடிஆர்டிஇமையம் உள்நாட்டில் உருவாக்கியது. அந்த வி- பிளாட்பார்முடன் இணைக்கப்பட்ட பிஎம்பி கவசவாகனம், நேற்று சி-17 ரக விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ராஜஸ்தானில் உள்ள மகாஜன் போர் பயிற்சி களத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.