Published : 20 Apr 2018 08:23 AM
Last Updated : 20 Apr 2018 08:23 AM
கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட தங்கத் தாலி, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பணம், தங்கம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்குவதாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. இதனால் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சரகுரு பேருந்து நிலையம் அருகே மஞ்சுநாத் என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரிடம் ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணமும், 300 கிராம் தங்க நகைகளும் சிக்கின. இதற்கான ரசீது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் மஞ்சுநாத்திடம் இல்லாததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 52 தாலி, 40 தங்க மாட்டல், 60 மூக்குத்தி உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நகைகள் எந்த கட்சியின் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தன? இதுவரை எவ்வளவு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT