Published : 25 Apr 2024 05:23 AM
Last Updated : 25 Apr 2024 05:23 AM

ஜெகன் மீதான கல்வீச்சு சம்பவம் ஒரு மாபெரும் நாடகம் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

சந்திரபாபு நாயுடு

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் ஒரு தேசிய ஆங்கில ஊடகத்திற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டு கால ஜெகனின்ஆட்சி, மக்களை மேலும் புண்படும்படி செய்து விட்டது. இந்த நிலையில் எனது மாநிலத்தையும், எனது மாநில மக்களையும் காப்பாற்றுவதை எனது முதல் கடமையாக கருதுகிறேன்.

மாநிலப் பிரிவினைக்கு முன்புஎனது ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத்திற்கு மிக உறுதியான வளர்ச்சி எனும் அடிக்கல்லை நாட்டினேன். இதனால் ஹைதராபாத் இப்போது அனைத்து துறைகளிலும் செழுமையாக உள்ளது. அதேபோன்று அமராவதியையும் உருவாக்க பாடுபட்டேன். அதனை 3 தலைநகரங்கள் எனும் பேச்சால் ஜெகன் சீரழித்து விட்டார்.

நான் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி மிகவும் போராடினேன். ஆனால், அது முடியாத காரணத்தால் சிறப்பு நிதிகளை பெற்று வந்தேன். மேலும், ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்இஆர், என்ஐடி, எய்ம்எஸ் என 11 தேசிய உயர்க்கல்வி கூடங்களைஆந்திராவுக்கு கொண்டு வந்தேன்.

மேலும், நிதி, அமராவதிக்கான ஒப்புதல், அமராவதி விவசாயிகளுக்கான மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது பெற்றுள்ளேன். ஆனால், இப்போது அனைத்தும் பாழாகி விட்டது. ஆனால், பிரதமர் மோடியின் ‘இந்தியா 2047 திட்டம்’ மற்றும் என்னுடைய அரசியல் அனுபவத்தால் ஆந்திராவை மீட்டெடுப்பேன்.

2047 எனும் தொலைநோக்கு திட்டத்தால் நமது நாட்டை உலகில்முதல் இடத்திற்கு கொண்டுசெல்ல பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்தால் கண்டிப்பாக இதுசாத்தியமே. இதனால் நம் மாநிலத்தின் தரமும் உயரும். இதற்கான நம்பிக்கை எனக்குள்ளது.

என் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றையாவது அவர்கள் நிரூபணம் செய்தார்களா? அரசியல் எதிர்ப்பு என்பது வேறு. ஆனால், ஜெகனின் எண்ணம் வேறு. அவர் என் மீது சேற்றை வாரி இறைக்க திட்டமிட்டார். முன்பை போல் இப்போது அரசியல் இல்லை. மாநில கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூர் வாசியின் தலைமையும் வேண்டும். அதே சமயம் மத்திய அரசின் உதவியும் நமக்கு வேண்டும். அப்போது தான் மாநிலம் சிறப்பாக செயல் பட முடியும். இதனை மக்களும் நன்று அறிவர்.

சமீபத்தில் பிரச்சாரத்தின் போது ஜெகன் மீதான கல்வீச்சு சம்பவம் குறித்து கேட்கிறீர்கள். முதல்வர் ஜெகன் கெட்டிக்காரத்தனமாக பொய் சொல்வதில் வல்லவர். கண்ணுக்கு கூட தெரியாத சிறிய கல் பட்டதால், ஒரு கொலை குற்றமே நடந்ததாக அதனை ஊதி பெரிதுபடுத்தி ஒரு மாபெரும் நாடகத்தை அவர் அரங்கேற்றி உள்ளார்.

இது ஒரு நாடகம் மட்டுமே. தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் ஜெகன் நிரூபணம் செய்துள்ளார். இவ்வாறு சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x