Published : 23 Apr 2024 09:40 AM
Last Updated : 23 Apr 2024 09:40 AM

320-ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி; கட்சி தகவல்

புதுடெல்லி: சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு 320-ஐ கடந்த நிலையில் அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டைப்-2 சர்க்கரை நோயாளியான அவர், தனது குடும்ப மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணையின்போது, “மாம்பழம் உள்ளிட்ட அதிக இனிப்புள்ள உணவுப் பொருட்களை கேஜ்ரிவால் சாப்பிடுகிறார். இதனால் சர்க்கரை அளவு அதிகமானால் அதைக் காரணமாகக் கூறி ஜாமீன் பெற அவர் முயற்சிக்கிறார்” என அமலாக்கத் துறை வாதிட்டது. இந்த குற்றச்சாட்டை கேஜ்ரிவால் தரப்பு மறுத்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “கேஜ்ரிவால் தனியார் மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதிக்க முடியாது. அதேநேரம், கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்த வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும். சர்க்கரை நோய் நிபுணர்களைக் கொண்டு அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளார். அவர் சிறை சென்ற பின்னர் வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதனை திஹார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட்டுகள் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x