Published : 23 Apr 2024 09:26 AM
Last Updated : 23 Apr 2024 09:26 AM

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க ஆணையம் திட்டம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் கடந்த 19-ம் தேதி 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவின்போது சராசரியாக 66 சதவீதவாக்குகள் பதிவாகின. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதால் தேர்தல் ஆணையம் கவலை கொண்டுள்ளது. எனவே,மீதமுள்ள 6 கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை வரவழைக்க தேர்தல் ஆணையம் அதிக முயற்சிகளைச் செய்து வருகிறது. இதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல்தூதர்களாக நியமித்து விளம்பரம்செய்தது.

மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) ஒப்பந்தம் செய்துஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட்டன. இருந்தபோதும் முதல் கட்ட தேர்தலில் எதிர்பார்த்த வாக்குப்பதிவுசதவீதம் வரவில்லை’’ என்றார்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. விரைவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை ஆணையம் கொண்டு வரும்’’ என்று தெரிவித்தன.

வரும் 26-ம் தேதி 2-ம் கட்டத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அதிக அளவில் வரவழைப்பதற்கான புதிய திட்டங்களை தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x