Last Updated : 19 Apr, 2024 06:44 AM

3  

Published : 19 Apr 2024 06:44 AM
Last Updated : 19 Apr 2024 06:44 AM

பாஜக ஆளும் மாநிலத்தில் போட்டியிட அச்சம் ஏன்? - ராகுல் காந்திக்கு குலாம் நபி ஆசாத் கேள்வி

குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் போட்டியிட அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் போட்டியிடத் தயங்குவதால் ஆசாத் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீரை சேர்ந்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு கட்சியிலிருந்து வெளியேறினார். ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) என்ற பெயரில் கட்சி தொடங்கிய அவர், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் உதம்பூர் மக்களவைத் தொகுதியில் டிபிஏபி வேட்பாளரை ஆதரித்து குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “பாஜக ஆளும் மாநிலங்களில் ராகுல் காந்தி போட்டியிட அஞ்சுவது ஏன்? பாஜகவை தீவிரமாக எதிர்ப்பதாக ராகுல் பேசி வருகிறார்.

ஆனால், அவரது நடவடிக்கைகள் அதற்கு எதிராக உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களை விடுத்து, சிறுபான்மையினர் நிறைந்த கேரளாவின் தொகுதியை ராகுல் தேர்வு செய்தது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீரின் முக்கிய எதிர்கட்சித் தலைவரான உமர் அப்துல்லாவையும் குலாம் நபி ஆசாத் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ’ராகுல், உமர் அப்துல்லா ஆகிய இருவரும் அரசியல்வாதிகள் அல்ல. மாறாக இவர்கள் இன்னும் ஸ்பூனில் பால் குடிக்கும் பாலகர்கள். இவர்கள் இதுவரை எந்த தியாகமும் செய்யவில்லை. இந்திரா காந்தி, ஷேக் அப்துல்லா போன்ற தங்கள் மூதாதையர்களுக்கு கிடைத்த அரசியலில் செல்வாக்கை இருவரும் அனுபவித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆசாத்தின் டிபிஏபியும் போட்டியிடுகிறது. கேரளாவின் வயநாடு எம்.பி.யான ராகுல் அங்கு மீண்டும் போட்டியிடுகிறார்.

ராகுல், உ.பி.யின் அமேதி தொகுதி எம்.பி.யாக கடந்த 2004 முதல் 2014 வரை இருந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் அமேதியிலும் போட்டியிட்ட ராகுல், அங்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். அமேதியில் காங்கிரஸ் இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால், ராகுல் அங்கு மீண்டும் போட்டியிடுவாரா, இல்லையா, என்ற கேள்வி நீடிக்கும் நிலையில், அவரை குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x