Published : 04 Apr 2018 08:20 AM
Last Updated : 04 Apr 2018 08:20 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வருகிற மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை தனி விமானம் மூலம் ஷிமோகா வந்த அவர், அங்கு காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, பிரச்சார வாகனம் மூலம் கிராமந்தோறும் சென்று வாக்கு சேகரித்தார்.
மாலையில் தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட நல்லவிதமாக பேச முடியாது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி குன்றிவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்படுகின்றனர். சிறுபான்மையினர் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கின்றனர். மோடி ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் மத்திய அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இதனைப் பற்றியெல்லாம் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது.
இதனை கண்டித்து வீதிக்கு வந்து போராடும் தலித் மக்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் வருகிற மக்களவை தேர்தலில் தலித் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கர்நாடக தேர்தலிலும் தலித் விரோத கட்சியான பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு ராகுல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT