“இது சாதாரண தேர்தல் அல்ல... நம் போராட்டம்!” - வீடியோ பதிவில் ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: “இது சாதாரண தேர்தல் அல்ல. நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார்.

அதில், “இது சாதாரண தேர்தல் அல்ல. இது நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம். எனவே, ஒவ்வொரு தொண்டரும் காங்கிரஸின் வாக்குறுதிகளை ஒவ்வொரு வீட்டுக்கும் பரப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள்தான் காங்கிரஸின் உண்மையான குரல்.

காங்கிரஸின் வாக்குறுதிகளை பரப்புவதற்கும், அதை நிறைவேற்றுவதற்கும் உறுதிமொழி எடுப்போம். காங்கிரஸ் தொண்டர்கள்தான் கட்சியின் முதுகெலும்பு, டிஎன்ஏ. பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் கருத்துக்கு எதிரானவை. அவர்கள் நமது அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, இந்திய தேர்தல் ஆணையம், நாட்டின் சட்டக் கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு எதிராக நீங்கள் தெருக்களிலும், கிராமங்களிலும், எல்லா இடங்களிலும் போராடுகிறீர்கள். நீங்கள்தான் பாதுகாவலர்கள். பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in