Published : 03 Apr 2018 08:01 AM
Last Updated : 03 Apr 2018 08:01 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தமிழக அரசைக் கண்டித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று போராட்டம் நடத்தினார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரும் தமிழக அரசை கண்டித்து கன்னட அமைப்புகளின் சார்பாக பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவரும், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாட்டாள் நாகராஜ் பேசுகையில், ‘‘தமிழக முழு அடைப்பை கண்டித்து கன்னட அமைப்புகளின் சார்பாக வரும் 5-ம் தேதி கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தப்படும். காவிரி விவகாரத்தில் ரஜினியும், கமலும் தமிழகத்துக்கு ஆதரவாக பேசுவது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் பிறந்த ரஜினி முழு தமிழராகவே மாறிவிட்டார். கர்நாடகாவுக்கு எதிராக பேசும் ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT