‘கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை’ - டி.கே.சிவகுமார்

‘கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை’ - டி.கே.சிவகுமார்
Updated on
1 min read

கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றப் போவதாக பாஜக பொய் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆர்எஸ்எஸ், பாஜக மேலிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி அவர்களுக்கு 250 இடங்கள் கூட கிடைக்காது என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகம் ஆகியவற்றை பாஜக த‌ங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. அதிலும் கர்நாடகாவில் பாஜகவினர் மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். எங்களின் ஓராண்டு நல்லாட்சியால் இங்கு காங்கிரஸ் அலை வீசுகிறது. பாஜக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

எங்களது ஆட்சியால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் மதிப்பிலான நன்மைகள் கிடைத்துள்ளது. எனவே காங்கிரஸ் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளை நிச்சயம் கைப்பற்றும். இதனை நான் சாதாரண நம்பிக்கையில் கூறவில்லை. அதீத நம்பிக்கையில் கூறுகிறேன். இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in