Published : 21 Apr 2018 08:28 AM
Last Updated : 21 Apr 2018 08:28 AM
ஹைதராபத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது தேசிய மாநாடு ஹைதராபாத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரும், சங் பரிவாரைச் சேர்ந்தவருமான நபாகுமார் சர்க்கார் என்பவர் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். ஆனால், அந்த வழக்கில் இருந்தும் அவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவித்த சிறிது நேரத்திலேயே நீதிபதி ரவீந்தர் ரெட்டி ராஜினாமா செய்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக என்ஐஏ அமைப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT