Published : 10 Apr 2024 10:07 PM
Last Updated : 10 Apr 2024 10:07 PM

‘தீமை, வஞ்சகத்துக்கு எதிரான போருக்கு தயாராகுங்கள்’ - மக்களிடம் முறையிட்ட ஜெகன்

ஜெகன் மோகன் ரெட்டி

குண்டூர்: ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒருசேர நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு பேருந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

புதன்கிழமை அன்று மாநிலத்தின் பாலநாடு மாவட்டத்தில் அவர் யாத்திரை மேற்கொண்டார். அதன்போது ஜன சேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். முதல்வர் ஜெகன் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. தொடர்ந்து கிராம மக்களிடம் முதல்வர் ஜெகன் பேசினார்.

“தீமை மற்றும் வஞ்சகத்துக்கு எதிரான போருக்கு நீங்கள் தயாரா? இது எம்எல்ஏ மற்றும் எம்பி-க்களை மட்டும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல. விவசாயிகளுக்கு கொடுத்த உத்தரவாதம் தொடரவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், குழந்தைகளின் கல்வி மேம்பாடும் சீராக தொடர வேண்டுமா அல்லது அது இருளில் மூழ்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது.

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். ஆலோசித்து முடிவெடுங்கள். சில ஊடக நிறுவனங்கள் பொய் பரப்புகின்றன. கழுதையை குதிரையாக வர்ணிக்கின்றன. இப்படித்தான் பொய் பரப்பப்படுகிறது. இது சதி வேலை. சந்திரபாபு நாயுடுவுடன் அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். அவருக்கு வாக்களித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள். இதற்கு முன்பு அவரது ஆட்சி காலத்தில் எத்தனை பேருக்கு அவர் அரசு பணியை வழங்கினார் என அவரால் சொல்ல முடியுமா?

ஆளும் அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் 2.31 லட்சம் மக்கள் அரசு வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். உங்களுக்கு ‘ஃபேன்’ வேண்டுமா (தனது கட்சியின் சின்னத்தை குறிப்பிட்டு) அல்லது துருப்பிடித்த ‘சைக்கிள்’ (தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம்) வேண்டுமா என முடிவு செய்யுங்கள்” என அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x