Published : 01 Apr 2018 10:22 AM
Last Updated : 01 Apr 2018 10:22 AM
பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் தேசிய மாநாடு டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி, மோசடிப் புகாரில் சிக்கிய பிறகு நாட்டைவிட்டு வெளியேறிய லலித் மோடி, நீரவ் மோடியுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டுப் பேசினார்.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷலாப் மணி திரிபாதி, உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
திரிபாதி கூறும்போது, “பிரதமர் மோடி, லலித் மோடி (ஐபிஎல் முன்னாள் ஆணையர்), நீரவ் மோடி (வைர நகை வர்த்தகர்) ஆகியோருக்கு இடையே ஒற்றுமை இருப்பதாக ராகுல் தெரிவித்தார். மோடி என்றால் ஊழல் என்று பொருள் என்றும் அவர் தெரிவித்தார். இது பாஜக தொண்டர்கள் மற்றும் மக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே, ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன்” என்றார்.
காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் அன்வர் ஹுசைன் கூறும்போது, “நாட்டு மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைகளை எதிர்ப்பது எங்கள் கடமை. இந்தப் பணியை காங்கிரஸ் தொடர்ந்து மேற்கொள்ளும். இதற்காக எத்தகைய வழக்கையும் சந்திக்கத் தயாராக உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT