Published : 22 Apr 2018 02:43 PM
Last Updated : 22 Apr 2018 02:43 PM
பாஜக என்பது புற்றுநோய், காங்கிரஸ் சளித் தொல்லை போன்றதுதான், எனவே அதற்கு சிகிச்சை உள்ளது என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தீவிர தேர்தல் பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது எனக் கூறி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இதனால் சமீபத்தில் அவர் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த தேர்தலில் எல்லோரும் ஊழலை பற்றி பேசுகிறார்கள். ஆளும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்ததாக கூறி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்தியாவில் மிகப்பெரிய புற்றுநோய் போன்று வகுப்புவாதம் வளர்ந்து வருகிறது. முதலில் அதைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்பின் ஊழலை ஒழிக்க முக்கியத்துவம் அளிக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை பாஜக என்பது புற்றுநோய்; ஆனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் சளித்தொல்லை போன்றவைதான். சளிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் புற்றுக் நோய்க்கு சிகிச்சை இல்லை. மரணம் ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT