Published : 03 Apr 2024 05:14 AM
Last Updated : 03 Apr 2024 05:14 AM

சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் ஏப்.25-ம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு 5 ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்

புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான விசாரணைக்கு திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர்ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் வரும் ஏப்.25-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு கட்டாயம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்.12-ம் தேதி 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி, மணல் குவாரிகளின் மொத்த ஏஜென்ட்களான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில்கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

முதன்மை பொறியாளர் ஆஜர்: இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர்ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற விவரங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மனுக்கு இடைக்கால தடை: இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத் துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பீலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அமித் ஆனந்த் திவாரியும், 5 மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகியும் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,அமலாக்கத் துறையின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக முடியவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஏப்ரல் மாத இறுதி வரை அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்து,ஆட்சியர்களின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,‘‘உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் மதித்து செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியர்களின் இந்த நடவடிக்கை கடினமான சூழலை ஏற்படுத்தி விடும்’’ என கண்டிப்புடன் தெரிவித்தனர்.

அமலாக்கத் துறைக்கு அதிகாரம்: மேலும், ‘‘சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு தேவையான எந்த தகவலுக்காகவும், யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் பிறப்பித்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்ததும், வரும் ஏப்ரல் 25-ம்தேதி 5 மாவட்ட ஆட்சியர்களும் கட்டாயம் அமலாக்கத் துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x