

புதுடெல்லி: டெல்லி திஹார் சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்ட முதல்வர் கேஜ்ரிவால் தூக்கமின்றி தவித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், நேற்று முன்தினம் மாலை திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியபோது, ரத்தத்தில் சர்க்கரை அளவு 50-க்கும் குறைவாக இருந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.
முதல்வராக இருப்பவர் திஹார் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை. அவர் 2-ம் எண் சிறையில் தனியாக அடைக்கப்பட்டார். மாலையில் அவருக்கு தேநீர் வழங்கப்பட்டது. இரவில் வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. படுப்பதற்கு தரைவிரிப்பு, இரண்டு தலையணை, ஒரு போர்வை வழங்கப்பட்டன.
14 அடி நீளம் 8 அடி அகலம் கொண்ட சிறை அறையில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் மேடையில் படுத்து சிறிது நேரம் கேஜ்ரிவால் தூங்கினார். நள்ளிரவில் தூக்கம் இன்றி நடந்து கொண்டிருந்தார் என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.