சோனியா காந்தி குடும்ப விவகாரங்களை அம்பலப்படுத்த அடுத்த புத்தகம்: நட்வர் சிங்

சோனியா காந்தி குடும்ப விவகாரங்களை அம்பலப்படுத்த அடுத்த புத்தகம்:  நட்வர் சிங்
Updated on
1 min read

தனது புத்தகத்துக்கு காங்கிரஸ் தரப்பில் வந்த தொடர் எதிர்ப்பினை அடுத்து, சோனியா காந்தி தொடர்பான விவகாரங்களை அம்பலப்படுத்த அடுத்தப் புத்தகத்தை வெளியிடப் போவதாக முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர் சிங் தெரிவித்தார்.

”மை இர்ரெகுலர் டயரி” என்ற அடுத்தப் புத்தகம் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று கூறினார் நட்வர்சிங்.

2004- ஆம் ஆண்டு சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காததற்கு ராகுல் காந்தியே காரணம் என்பது உள்ளிட்ட பல விவகாரங்களை, தனது ஒன் லைப் இஸ் நாட் இனஃப் (One Life is Not Enough ) புத்தகத்தில் வெளியிட்ட முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் நடவர் சிங்கிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பெரும் பரபரப்புக்கு இடையே வெளியான இந்த புத்தகத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. புத்தகம் வெளியான 4 நாட்களில் முதல் சுமார் 50,000 பிரதிகள் விற்பனை ஆகி உள்ளது.

இந்த நிலையில், இந்த புத்தகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் உள்துறை அமைச்சர் நட்வர் சிங், " இந்த புத்தகம் எனது எதிர் பார்ப்பையும் விஞ்சிவிட்டது. இதற்காக எனக்கு ஆதரவு அளித்த அனைத்து காங்கிரஸார்களுக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன்.

இதில் சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கலாம். அதனை அனைத்தையும் வெளிகொண்டுவர அடுத்த பாகம் எழுத உள்ளேன். அதற்கான வேலைகளை நான் ஆரம்பித்துவிட்டேன்.

நான் எழுதினால் மட்டுமே, பல விஷயங்கள் வெளிவரும் என்பதால், இதனை நான் செய்தே ஆக வேண்டும் என்று எண்ணுகிறேன். நிச்சயம் அதில் உண்மைகள் நிறைந்திருக்கும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in