பணமோசடி வழக்கில் முன்னாள் திரிணமூல் காங். எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

கே.டி. சிங்
கே.டி. சிங்
Published on

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமான கே.டி. சிங் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அல்கெமிஸ்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அல்கெமிஸ்ட் டவுன்ஷிப் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

அதிக வருமானத்தை வழங்குவதாகவும், பொதுமக்களின் முதலீட்டுக்கு அதிக வட்டி விகிதம் தவிர கூடுதலாக வீட்டு மனைகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதாக கூறி அந்த நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ, உத்தர பிரதேச காவல் துறை மற்றும் மேற்கு வங்க காவல் துறை ஆகியவை வழக்குப்பதிவு செய்தன.

அதனடிப்படையில் பணமோசடி சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை (ஈ.டி.) நடத்திய விசாரணையில் அல்கெமிஸ்ட் குழுமத்துக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

பீச்கிராஃப்ட் விமானம், இமாச்சல பிரதேசம், ஹரியாணா மற்றும் மத்திய பிரதேசத்தில் அந்த குழுத்துக்கு சொந்தமாக உள்ள குடியிருப்புகள், சொத்துகள் ஆகியவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.29.45 கோடி என ஈ.டி. தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து வசூலித்த பணத்தை அல்கெமிஸ்ட் குழுமம் முறைகேடாக தனது பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப பட்டுள்ளது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in