Published : 08 Feb 2018 02:54 PM
Last Updated : 08 Feb 2018 02:54 PM
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்களும் மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவர்கள் மகப்பேறு விடுமுறையாக 26 வாரங்கள்(180நாட்கள்) ஊதியத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
2015ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் இது தொடர்பாக மத்திய பணியாளர் பயிற்சித் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கேந்திரியா வித்தியாலயா பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுத்தார். ஆனால், அவருக்கு மகப்பேறு விடுமுறை மறுக்கப்பட்டது. அவர் உடல்ரீதியாக குழந்தையை பெற்று எடுக்கவில்லை என்பதால் மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது என்று காரணம் கூறப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று எடுத்த தாய், பணி புரிந்து கொண்டு இருந்தால், அவரும் மகப்பேறு விடுப்பு எடுக்க தகுதியானவர். அவரும் மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், மகப்பேறு விடுப்பு அளிப்பது குறித்தும், எத்தனை மாதங்கள் அளிப்பது என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடிவு எடுக்கலாம். அதேபோல விடுமுறைக்கு விண்ணப்பிக்கும்போது, யார் வாடகைத் தாய், எப்போது குழந்தை உருவானது உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை ஏற்று மத்திய பணியாளர் பயிற்சி துறை அமைச்சகம் அனைத்து துறைகளுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதி மகப்பேறு விடுப்பு அளிக்க உத்தரவிட்டது. மேலும், அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் நீதிமன்றத்தின் உத்தரவு நகலையும், சுற்றறிக்கையின் நகலையும் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்களும் மகப்பேறு விடுமுறையாக 26 வாரங்கள்(180நாட்கள்) ஊதியத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT