Published : 17 Feb 2018 01:58 PM
Last Updated : 17 Feb 2018 01:58 PM

பிஹார் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு: 1000 மாணவர்கள் பிடிபட்டனர்; போலி கண்காணிப்பாளர்கள் சிக்கினர்

பிஹாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 1,000 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். தேர்வு மையத்தில் 24 போலி தேர்வு கண்காணிப்பாளர்களும் சிக்கியுள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிகஅளவு மாணவர்கள் காப்பியடிப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தேர்வில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு 42 வயது என்பது பின்னர் தெரிய வந்தது. போலியாக தனது வயதை குறிப்பிட்டு மோசடி செய்ததும் பின்னர் அம்பலமானது.

இந்நிலையில், இதனை தடுக்க இந்த ஆண்டு பிஹார் மாநில பள்ளி தேர்வு வாரியம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 1,384 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களை கண்காணிப்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. காப்பியடிக்கவும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முறைகேடான வகையில் கேள்விக்கான பதில்களை தந்து உதவும் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை கண்காணிக்கவும் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருந்தது.

தேர்வுகள் தற்போது முடிந்துள்ள நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 1,000 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். மேலும் தேர்வு அறைகளில் போலியான தேர்வு கண்காணிப்பாளர்கள் 24 பேர் சிக்கியுள்ளனர். மாணவர்கள் காப்பியடிக்க அவர்களது பெற்றோர் உதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது காவல்துறையிடம் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஹார் தேர்வுகள் வாரிய தலைவர் ஆனந்த் கிஷோர் கூறியதாவது:

‘‘பிஹாரில் பள்ளித் தேர்வுகளில் கூட்டமாக காப்பியடித்த சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. இதையடுத்து, இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க இந்த ஆண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தோம். எனவே இந்த ஆண்டு பெரிய அளவில் முறைகேடுகள் குறைந்துள்ளன’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x