Published : 08 Feb 2018 06:00 PM
Last Updated : 08 Feb 2018 06:00 PM

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் என்னாயிற்று?- மத்திய அரசை 12 கேள்விகளால் விளாசிய ப.சிதம்பரம்

 

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவதாக பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும்போது கூறியது என்னாயிற்று? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு 12 விதமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அந்த விவரம் வருமாறு:

1. 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-18 ஆம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதம் என்ற நிலையில் அது 3.5 சதவீதமாக அதிகரித்துவிட்டது. 2018-19 ஆம் ஆண்டில் 3 சதவீதம் என்பது 3.3 சதவீதமாக உயரும். 2017-18, 2018-19 ஆம் ஆண்டில் நடப்பு கணக்குப் பற்றாக்குறை குறித்து பாஜக அரசின் மதிப்பீடு என்ன?

2. ஒவ்வொரு நிதிப் பற்றாக்குறை இலக்கையும் அரசே முறியடிக்கிறது. நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு என்பது பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தற்போது, மொத்தவிலை பணவீக்கம் 3.6 சதவீதமும், சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதமும் இருக்கிறது. அப்படி என்றால், 2017-18, 2018-19 ஆம் ஆண்டில் உங்களின் சராசரி சில்லரை, மொத்த விலை பணவீக்கம் எவ்வளவு?

3. 10 ஆண்டுக்கான நிதிப் பத்திரத்தின் வட்டி 7.43 சதவீதம் என்ற நிலையில், அது 7.57 சதவீதமாக நேற்று இருக்கிறது. அப்படி என்றால், அனைத்து கடன் பத்திரங்களின் வட்டி உயர்த்தப்படுவதற்கான குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா?. பணவீக்கத்தால் வட்டிவீதம் உயர்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

4. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் 70 முதல் 75 அமெரிக்க டாலராக உயர்ந்தால், உங்களின் பட்ஜெட் கணக்கீட்டை எப்படி பாதிக்கும்?, குறிப்பாக பற்றாக்குறையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல், டீசலின் சில்லரை விலையை உயர்த்துவீர்களா அல்லது உற்பத்தி வரியை குறைப்பீர்களா?

5. 2017-18 ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.48 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளது. அரசின் சார்பில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.37 ஆயிரம் கோடி வாங்குகிறது. அப்படி என்றால், இந்த ரூ.85 ஆயிரம் கோடி எங்கு செல்லும்? 2017-18 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த செலவு ரூ.71 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. ஆனால், வருவாய் செலவீனம் என்பது ரூ.ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 371 கோடியாக இருக்கிறது. இது அரசின் ஒட்டுமொத்த நிதிக் கட்டுக்கோப்பின் விதிமுறைகளை உடைப்பதாகுமா?

6. 2017-18 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முதலீட்டு செலவு ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 801 கோடியாகும். திருத்தப்பட்ட மதிப்பீடாக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடியாகும். ஆக ரூ.36 ஆயிரம் கோடி பற்றாக்குறை நிலவுகிறது. அப்படி என்றால் எந்தெந்த திட்டங்களையும், கட்டமைப்புகளையும் நிறுத்தப் போகிறீர்கள்?

7. 2018-19 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11.5 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அரசின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 2018-19 ஆம் ஆண்டில் எப்படி இருக்கும்?

8. பாஜக அரசு பொறுப்பேற்கும்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவதாகக் கூறியது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிகக்கையின்படி, முறையான பாதுகாப்புகள் இருக்கும் வேலையே வேலைவாய்ப்பாக கருதமுடியும், அதுதான் பாதுகாப்பானது என்றது. அப்படி என்றால், பாஜக அதிகாரத்தில் வேலைவாய்ப்பு என்றால் என்ன? கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியது போன்ற வேலைவாய்ப்புகளை எத்தனை கோடி உருவாக்கி இருக்கிறீர்கள்?

9. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் சுங்க வரியாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் கோடி கணக்கிடப்பட்டது. அதன்பின் திருத்தப்பட்ட அறிக்கையாக ரூ.ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 242 கோடியாக மாற்றப்பட்டது. இந்த கதையை இன்னும் நீங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் சொல்லவில்லையா?

10. 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்துவிட்டது. உங்கள் அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 631 கோடியாகும். இந்த வரி வசூல் 8 மாதங்களிலா அல்லது 9 மாதங்களிலா, அல்லது 11 மாதங்களிலா? என்பதை கூறுங்கள்

11. 2018-19 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த வரி வருவாய் 16.7 சதவீதம் என மதிப்பிட்டீர்கள். சராசரி பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதம் என்று கூறும் போது, வரி வருவாய் வளர்ச்சி 16.7 சதவீதம் என்பது சாத்தியமா?

12. 2018-19 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரி 10.15 சதவீதம், வருமானவரி 19.88 சதவீதம், ஜிஎஸ்டி 67.31 சதவீதம் உயரும் என மதிப்பிட்டுள்ளீர்கள். இந்த வரித்தத்துவம் குறித்து நீங்கள் நாட்டு மக்களிடம் பகிர்ந்துவிட்டீர்களா?''

இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x