அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் நிறைவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்
அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடையும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. அவரை இன்று (மார்ச் 28) வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அமலாக்கத் துறையால் தான் விசாரணை எதுவுமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கை தனது அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டு கேஜ்ரிவால் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து இப்போதைக்கு எந்த நிவாரணமும் அளிக்க முடியாது என்று கூறியிருந்தது. மேலும் இது தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடையும் நிலையில், இன்று அவரை அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது.

மேலும், கேஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவிலிருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

முன்னதாக, நேற்று அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிடுவார் என்று அவரது மனைவி சுனிதா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in