Published : 28 Mar 2024 05:50 AM
Last Updated : 28 Mar 2024 05:50 AM

அர்விந்த் கேஜ்ரிவாலை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு: ஏப்ரல் 3-ல் அடுத்த விசாரணை

கோப்புப்படம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை இப்போதைக்கு விடுவிக்க முடியாது எனவும், இது தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வாரத்தில்பதில் அளிக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. அவரை இன்று வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிரூபிக்க முடியவில்லை: டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில், ‘‘அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை தனது அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எனக்கு எதிரான குற்றத்தை அமலாக்கத்துறையால் நிருபிக்க முடியவில்லை. அமலாக்கத் துறையின் சோதனையில் பணமோ, அல்லது சொத்து ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை. விசாரணையின்றி நான் கைது செய்யப்பட்டுள்ளேன். எனது கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘‘அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து இப்போதைக்கு எந்த நிவாரணமும் அளிக்க முடியாது. இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அமலாக்கத் துறை பதில் அளிக்க வேண்டும். இதன் அடுத்த விசாரணை ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறும்’’ என கூறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x