Published : 23 Mar 2024 06:52 PM
Last Updated : 23 Mar 2024 06:52 PM

அமலாக்கத் துறை விசாரணை, கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கேஜ்ரிவால்!

கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்.

புதுடெல்லி: தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கேஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் குழு, "டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியதும் சட்டவிரோதமானவை. அவர் உடனடியாக காவலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதனை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளோம்" என தெரிவித்துள்ளது.

பாஜக குற்றச்சாட்டு: இதனிடையே, கேஜ்ரிவால் அனுதாபம் தேட முயல்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷைனா என்சி, "பாதிக்கப்பட்டவரைப் போல் தன்னைக் காட்டிக்கொள்ள கேஜ்ரிவால் முயல்கிறார். உண்மை பொதுவெளியில் வர வேண்டிய நேரம் இது.

இந்த வழக்கை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஒருமுறை, இருமுறை அல்ல... எட்டு முறை விசாரணைக்கு அழைத்தபோதும் விசாரணைக்கு ஆஜராகாதவர் கேஜ்ரிவால். இந்த வழக்கில் அவர் சட்ட ஆலோசனையை எப்போதோ பெற்றிருக்க முடியும்.

டெல்லி மதுபான கொள்கை காரணமாக, எவ்வாறு மதுபான அனுமதி முழுமையாக மாற்றப்பட்டது, அது எவ்வாறு சில நபர்களுக்கு சாதகமாக இருந்தது, எவ்வாறு பணம் கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் எல்லாமே சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் வெளிவந்திருக்கின்றன.

சுமார் ரூ.400 கோடி அளவுக்கு வருமானத்துக்கு பொருத்தமல்லாத பணம் கைமாறி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கோவா அரசு தெரிவித்திருக்கிறது. அதன் காரணமாகவே, சட்டவிரோத பண பரிவர்த்தனை (PMLA) வழக்கு பதியப்பட்டுள்ளது. தனது அதிகாரத்துக்கு உட்பட்டே அமலாக்கத் துறை சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி சொல்வது என்ன? - இதனிடையே, டெல்லி அமைச்சர் அதிஷி கூறும்போது, “மதுபானக் கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், அமலாக்கத் துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த இரண்டு வருடங்களாக எங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரே கேள்விதான் எழுகிறது. இத்தனை சோதனைகள் நடந்திருந்தும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்களிடமிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் எங்கே? அந்தப் பணம் எங்கே போனது?

சரத் சந்திர ரெட்டி என்ற ஒரு நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சரத் சந்திர ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு நன்கொடை கொடுத்த அரபிந்தோ பார்மாவின் உரிமையாளர்.

கடந்த 2022-ம் ஆண்டு நவ.9-ஆம் தேதி இவருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர், தான் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்ததோ, அவரிடம் பேசியதோ இல்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பல மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் தனது கூற்றை மாற்றிக் கொண்டார். அவர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தாகவும், மதுபான கொள்கை தொடர்பாக அவரிடம் பேசியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், ஊழல் செய்யப்பட்டதாக சொல்லப்படும் அந்தப் பணம் எங்கே போனது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கின் பின்னணி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. எனினும், 6 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தற்போது அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை விசாரணையின் கீழ் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x