Published : 22 Mar 2024 07:26 PM
Last Updated : 22 Mar 2024 07:26 PM

பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதை வழங்கியது பூடான் அரசு!

திம்பு: பூடானின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் இந்த விருதை வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று பூடான் சென்றார். பாரோ விமான நிலையத்தில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி பார்வையிடும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பூடானின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் த ட்ரக் கிளைல்போ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டவர் பிரதமர் நரேந்திர மோடி. விருதை, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இந்தியா - பூடான் உறவுக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியதன் மூலம், பூடானுக்கும் அந்நாட்டின் மக்களுக்கும் சேவை புரிந்ததை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக பூடான் தெரிவித்துள்ளது. விருதினைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதனை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பூடானின் 114-வது தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்ற 2021, டிசம்பர் 17 அன்று இந்த விருது குறித்த அறிவிப்பு, பூடான் அரசரால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த விருதை பிரதமர் மோடி இன்று நேரில் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பின்னர், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x