Published : 21 Mar 2024 01:52 PM
Last Updated : 21 Mar 2024 01:52 PM

விளம்பர வழக்கில் நோட்டீஸ் எதிரொலி: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி

கோப்புப்படம்

புதுடெல்லி: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் மருத்துவ திறன் குறித்த தவறான விளம்பர கூற்றுக்காக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பர சர்ச்சை தொடர்பான வழக்கின் நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்த மறுநாளான நேற்று, பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்தநிலை, நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணனை ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “சட்டத்தின் ஆட்சி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாது என்பதை நிறுவனம் உறுதியளிக்கிறது.

வாழ்க்கை முறை மற்றும் நோய்களுக்கு ஆயுர்வேத ஆராய்ச்சியின் மூலமாக பழங்கால குறிப்புகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தி பதஞ்சலி பொருட்களைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அந்த விளம்பரங்களின் நோக்கம்.

ஒவ்வொரு குடிமகனும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் நோய்களுக்கான மருத்துவச் சிக்கலுக்கு முழுமையான, சான்றுகள் அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதார கட்டமைப்பின் சுமையைக் குறைப்பதே ஒரே நோக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி: ஆயுர்வேத தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக, இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ (IMA) தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்தது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக ஐஎம்ஏ குற்றஞ்சாட்டியது. நவீன மருத்துவமான அலோபதிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியது.

யோகா குரு ராம்தேவ் இணை நிறுவனராக இருக்கும் பதஞ்சலி ஆயுர்வேத வழக்கினை கடைசியாக கடந்த நவம்பர் மாதம் விசாரித்த நீதிமன்றம், “யோகா குரு பாபா ராம்தேவுக்கு என்னவாயிற்று? அவர் யோகா கலையை பிரபலப்படுத்தியதால் அவர் மீது மரியாதை கொண்டோம். ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிப்பது தவறு. அவருடைய நிறுவன விளம்பரங்கள் மருத்துவர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிக்கின்றன” என்று அப்போது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x