Published : 16 Feb 2018 02:40 PM
Last Updated : 16 Feb 2018 02:40 PM

சிவப்பு விளக்கு எரிந்தால் முன்னேறிச் செல்ல முடியுமா?- திரிபுராவில் இடதுசாரி கட்சிகளை கிண்டலடித்த மோடி

சாலையில் வாகனத்தில் செல்லும் போது சிவப்பு விளக்கு எரிந்தால் முன்னேறிச் செல்ல முடியாது, அதுபோலவே இடதுசாரி கட்சிகள் ஆட்சி நடத்தும் திரிபுராவில் மக்களுக்கு முன்னேற்றம் இருக்காது என அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரத்தல் பிரதமர் மோடி பேசினார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தலைநகர் அகர்தலாவில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் மாணிக் சர்க்காரையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"இந்த கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். அவர்கள் உள்ளே வந்து எனது பேச்சைக் கேட்க வாய்ப்பு வழங்க முடியாத நிலை இருப்பது குறித்து வருந்துகிறேன். என் மீது அன்பு செலுத்தும் திரிபுரா மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரிபுராவில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரிக் கூட்டணி அரசு எந்த வளர்ச்சிப் பணியையும் செய்யவில்லை. சாலையில் வாகனத்தில் செல்லும் போது சிவப்பு விளக்கு இருந்தால் முன்னேறிச் செல்ல முடியாது. அதுபோல சிவப்பு கொடி தாங்கிய இடதுசாரிகள் ஆட்சி நடத்தும் திரிபுரா மாநிலத்திலும் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. பல மாநிலங்களை ஒப்பிட்டால் திரிபுராவில் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளது. இந்த மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த பாஜகவால் மட்டுமே முடியும்.

தேர்தல்களில் மோசடி செய்தே திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு பதவியை தக்க வைத்துள்ளது. இனி அவர்களின் மோசடி வேலை பலிக்காது. தேர்தல் மோசடியை இனிமேல் அனுமதிக்க மாட்டோம். இந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் கடைசி இடதுசாரி அரசு இதுதான். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்’’ எனப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x