Published : 10 Feb 2018 07:34 AM
Last Updated : 10 Feb 2018 07:34 AM

மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் மாநிலம் தழுவிய காலவரையற்ற போராட்டம்: ஆந்திர அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

ஆந்திர மாநிலத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு மத்திய அரசு இணங்காவிடில், அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுமென, ஆந்திர மாநில தலைமை செயலக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று அறிவித்தனர்.

ஆந்திர மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கவில்லை என்பதை வலியுறுத்தி ஆந்திராவில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் குதித்துள்ளன. வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நாள் அடையாள முழுஅடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படிப்படியாக போராட்டம் நடத்துவது என ஆந்திர அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று ஆந்திர தலைநகரான அமராவதியில் தலைமை செயலக ஊழியர்கள் சங்க தலைவர் முரளி கிருஷ்ணா தலைமையில் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது ஊழியர்கள் சங்க தலைவர் முரளி கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநில பிரிவினையின் போது ஆந்திராவிற்கு 16 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை இருந்தது. பிரிவினை மசோதாவில் இந்த தொகையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 4 ஆண்டு ஆகியும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மேலும், தலைநகர் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் கால தாமதம் செய்து வருகிறது. மேலும் பிரிவினை மசோதாவில் அறிவித்த எந்தவொரு சிறப்பு நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. ஆளும் கட்சியின் தோழமை கட்சியாக இருப்பதினால் பாஜ கட்சி அநீதி இழைக்காது என தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அமைதி காத்தார். ஆனால் தற்போது பாஜவின் கடைசி பட்ஜெட்டிலும் ஆந்திராவிற்கு வழங்க வேண்டிய எந்த சிறப்பு நிதியும், திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்காதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனால், ஆந்திராவிற்கு மத்திய அரசு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் இன்னமும் 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும். இல்லாவிட்டால், கடந்த 2014-ம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தை பிரிக்க கூடாது என வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஈடுபட்டதைப் போல தீவிர போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ஊழியர் சங்க தலைவர் முரளி கிருஷ்ணா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x