அஜீத் பவாருக்கு கடிகாரம், சரத் பவாருக்கு தாரை சின்னம்

அஜீத் பவாருக்கு கடிகாரம், சரத் பவாருக்கு தாரை சின்னம்
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக,தேசியவாத காங்., அஜித் பவார் தரப்பு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) சரத் பவாரால் தொடங்கப்பட்ட நிலையில், அவரது சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியிலிருந்து பிரிந்துசென்று பாஜக கூட்டணியில் இணைந்தார். அவருக்கு என்சிபி-யின் 53 எம்எல்ஏக்களில் 41 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, கட்சியின் பெயர் மற்றும் கடிகார சின்னம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே போட்டி நிலவியது. அஜித் பவார் தலைமையிலான கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததுடன் அவர்களுக்கு கடிகார சின்னத்தையும் ஒதுக்கியது.

சரத் பவார் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) என்ற பெயரை தற்காலிகமாக வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவைஎதிர்த்து சரத் பவார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த சூழ்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:

அஜித் பவார் தரப்பு கடிகாரம்சின்னத்தை பயன்படுத்தலாம். ஆனால், அது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்பதை விளம்பரங்கள் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும். சரத் பவார் அணியினர் தாரைசின்னத்தையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார்) என்ற பெயரையும் பயன்படுத்தலாம்.

இருப்பினும், இந்த உத்தரவு தற்காலிகமானது. இந்த விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in