Published : 20 Mar 2024 06:14 AM
Last Updated : 20 Mar 2024 06:14 AM

2004-ல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்துக்கு ஏற்பட்ட நிலைதான் ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற பிரச்சாரத்துக்கு ஏற்படும்: மல்லிகார்ஜுன கார்கே

கோப்புப்படம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், ‘இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்தை எழுப்பினார். அந்த தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘மோடியின் உத்தரவாதங்கள்' என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இந்தியா ஒளிர்கிறது' கோஷத்துக்கு என்னகதி ஏற்பட்டதோ, அதே கதி தற்போதைய மோடியின் உத்தரவாதங்கள்' கோஷத்துக்கும் ஏற்படும்.

கடந்த 1926-ம் ஆண்டு முதல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, நம்பிக்கையின் மறுவடிவமாக கருதப்படுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தற்போதைய சூழலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் கிராமங்கள், நகரங்களில் கட்சியின் தேர்தல் அறிக்கையை முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து வீடுகளையும் நமது தேர்தல் அறிக்கை சென்றடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

காங்கிரஸ் பிராந்திய தலைவர்கள், தொண்டர்களுக்கு வழிகாட்டியாக, ஊக்க சக்தியாக செயல்பட வேண்டும். நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

ராகுல் காந்தியின் பாரதயாத்திரை நாடு தழுவிய அளவில்மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனது யாத்திரையின் மூலம்மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளை ராகுல் எழுப்பி இருக்கிறார். அவரது யாத்திரை வெறும் அரசியல் யாத்திரை கிடையாது, மிகப்பெரிய மக்கள் இயக்கமாக நடைபெற்றது. இவ்வாறு கார்கே பேசினார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறும்போது, “கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிடும் தேதியை அவர் முடிவு செய்வார். எங்களது தேர்தல் அறிக்கை வெறும் தேர்தல் அறிக்கையாக இருக்காது, நியாய பத்திரங்களாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x