டெல்லி திஹார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் எம்.பி.யாக பதவியேற்க அனுமதி

சஞ்சய் சிங்
சஞ்சய் சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது எம்.பி. பதவி கடந்த ஜனவரி மாதம் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். இதையடுத்து, எம்.பி.யாக பதவியேற்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.கே.நாக்பால் சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளார். இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வரும் 19-ம் தேதி (இன்று) சஞ்சய் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவரை பாதுகாப்பாக நாடாளுமன்றம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை சிறை கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும். பதவியேற்றுக் கொண்ட பிறகு அவரை பத்திரமாக சிறைக்கு மீண்டும் அழைத்து வர வேண்டும்.

பேட்டி அளிக்கவோ பொதுக் கூட்டத்தில் பேசவோ அனுமதிக்கக் கூடாது. மேலும் 19-ம் தேதி சஞ்சய் சிங் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in