டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 23-ம் தேதி வரை கவிதாவை காவலில் எடுத்தது அமலாக்கத் துறை

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கே. கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகளால் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவிதா. படம்: பிடிஐ
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கே. கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகளால் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவிதா. படம்: பிடிஐ
Updated on
1 min read

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவின் ஹைதராபாத் வீட்டில் ஐ.டி. மற்றும் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் கவிதாவிடம் இருந்து 9 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அவரைகைது செய்த அதிகாரிகள், இரவோடு இரவாக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் தங்க வைத்தனர். நேற்று காலையில் அவருக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, கவிதாவை டெல்லி ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் கவிதாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்த 10 நாட்கள் அனுமதி கோரினர். ஆனால், வரும் 23-ம் தேதி (7 நாட்கள்) வரை கவிதாவிடம் விசாரிக்க நீதிபதி நாக்பால் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து அமலாக்க துறையினர் கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

மேலும், கவிதாவுக்கு வீட்டு சாப்பாடு வழங்கவும், அவரின் உறவினர்கள் வந்தால் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி,கவிதாவை அமலாக்க துறையினர்மீண்டும் டெல்லி அலுவலகத்திற்கே விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, கவிதாவின் கைதை கண்டித்து, நேற்று தெலங்கானா மாநிலம் முழுவதும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், தர்னா போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இது அரசியல் பழிவாங்கும் செயல் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in