Last Updated : 26 Feb, 2018 12:45 PM

 

Published : 26 Feb 2018 12:45 PM
Last Updated : 26 Feb 2018 12:45 PM

ஸ்ரீதேவியின் அந்த கடைசி நிமிடங்கள்... : கணவருடன் ‘சர்பிரைஸ்’ விருந்து சாப்பிட முடியாத சோகம்

நடிகை ஸ்ரீதேவி தான் இறக்கும் சில நிமிடங்களுக்கு முன், தனது அன்புக் கணவருடன் சர்பிரைஸ் விருந்து சாப்பிடும் மகிழ்ச்சியில் இருந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பிறந்து, தமிழ் திரை உலகிலும், பாலிவுட்டிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதேவி. 54 வயதான ஸ்ரீதேவி தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு தனது கணவர், மகளுடன் துபாய்க்கு சென்று இருந்தபோது, அங்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு பாலிவுட், தமிழ் திரைஉலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவரின் உடல் இன்று மும்பை கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன. இதற்காக அனில் அம்பானி ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டுவர தனது தனிப்பட்ட விமானத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஸ்ரீதேவி மாரடைப்பால் இறப்பதற்கு முன் அவருக்கு என்ன நேர்ந்தது?, எப்படி மகிழ்ச்சியாக இருந்தார்? என்பது குறித்து குடும்ப வட்டாரங்கள் சில தகவல்களைக் கூறியுள்ளனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், துபாயில் திருமணம் முடிந்தபின் மீண்டும் மும்பைக்கு சென்றுவிட்டார். பின் தனது மனைவி ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மும்பையில் இருந்து துபாய்க்கு வந்துள்ளார்.

அங்குள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலுக்கு சென்று ஸ்ரீதேவியை போனிகபூர் சந்தித்துள்ளார். அவரைக் கண்டு ஸ்ரீதேவி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஹோட்டல் அறையில் மகிழ்ச்சியா பேசிய ஸ்ரீதேவியை அழைத்துக் கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு விருந்துக்கு அழைத்துச் செல்ல போனி கபூர் திட்டமிட்டு இருந்தார். இதை முன்கூட்டியே ஸ்ரீதேவியிடம் சொல்லாமல் விரைவாக தாயாராகு என்று மட்டும் போனி கபூர் கூறி இருந்தார் எனதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அன்று மாலை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக்கொண்டு இருந்தார். குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவி 15 நிமடங்களுக்கு மேல் ஆகியும் அவர் வெளியே வராதது கண்டு போனி கபூருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, குளியல் அறை கதவை தட்டியும், ஸ்ரீதேவி திறக்கவில்லை. இதையடுத்து, கதவை வலுக்கட்டாயமாக திறந்தபோது, ஸ்ரீதேவி குளியல் அறை தொட்டியில் மூர்ச்சையாகி கிடந்துள்ளார்.

இதைக்கண்டு, போனிகபூர் அதிர்ச்சி அடைந்து . ஸ்ரீதேவியை குளியல் தொட்டியில் இருந்து தூக்கி, தனது நண்பருக்கு போனி கபூர் தகவல் தெரிவித்தார். அதன்பின் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், போலீஸார் வருவதற்குள் ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர் என அவரின் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தனது அன்பு மனைவி ஸ்ரீதேவிக்கு விருந்து அளிக்க நினைத்த போனி கபூரின் ஆசையும், நிறைவேறவில்லை, கணவருடன் வெளியே செல்லப் போகிறோம் என்று ஸ்ரீதேவியின் ஆசையும் நிறைவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x