தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது: டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

ஹைதராபாத்தில் நேற்று கைது செய்யப்படட் கவிதா
ஹைதராபாத்தில் நேற்று கைது செய்யப்படட் கவிதா
Updated on
1 min read

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனாலும், அவர் கைது செய்யப்படாததால், சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் ரகசியஉடன்பாடு இருப்பதாக காங்கிரஸார் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான வரி மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் 10 பேர், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு நேற்று வந்தனர். கவிதா, அவரது கணவர் அனில்உட்பட வீட்டில் இருந்த அனைவரது செல்போன்களையும் கைப்பற்றிய பிறகு, 4 மணி நேரம் தீவிரசோதனை நடத்தினர். பின்னர், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மூலமாக ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி வாரன்ட் வழங்கிய அமலாக்கத் துறையினர் மாலை 6.20 மணி அளவில் அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே, கவிதா வீடு முன்பு பிஆர்எஸ் கட்சியினர் பெருமளவில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கவிதாவை அமலாக்கத் துறையினர் நேற்று இரவு 8.40 மணிவிமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அங்கு உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் அவரை இன்று காலை ஆஜர்படுத்த உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in