Published : 15 Mar 2024 01:09 PM
Last Updated : 15 Mar 2024 01:09 PM

2024 மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; தேர்தல் ஆணைய சமூக வலைதளங்களில் நேரலை

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருடன் தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அட்டவணை, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை ஆகியனவற்றை நாளை (மார்ச் 16) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடயிருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இது தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அண்மையில் ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் சென்ற இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தினர்.

ஜனநாயகத் திருவிழா: ஒவ்வொரு ஐந்து ஆண்டும் 543 தொகுதிகள் கொண்ட மக்களவைத் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி இப்போதே தேசியக் கட்சிகள் தத்தம் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பாஜக இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மாநிலக் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளார். இவ்வாறு தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.

தேர்தல் ஆணையர்கள் நியமனம்: இதனிடையெ, புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று அவர்கள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வரவேற்றார்.

தேர்தல் பத்திரங்கள் வெளியீடு: அதேபோல், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 204 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x