ஹேமந்த் சோரனின் துன்புறுத்தல் புகார்: அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஜார்க்கண்ட் போலீஸ் சம்மன்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் | கோப்புப்படம்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் | கோப்புப்படம்
Updated on
1 min read

ராஞ்சி: தன்னையும் தன்னுடைய சமூகத்தையும் துன்புறுத்தி அவதூறு செய்தாகாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேம்ந்த் சோரன் அளித்த புகார் குறித்து மார்ச் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஜார்க்கண்ட் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ராஞ்சியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சாந்தன் குமார் சின்ஹா, அதுகுறித்த விபரங்களைக் கூற மறுத்ததுடன், மேலதிக தகவல்களை வழக்கு விசாரணை அதிகாரி வழங்குவார் என்று தெரிவித்தார்.

அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக எந்த விதமான கட்டாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய ஒரு வாரத்துக்கு பின்பு இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிலமுறைகேடு வழக்குத் தொடர்பாக கடந்த ஜன.31-ம் தேதி அமலாக்கத் துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். ஆனால் அன்றைய தினமே அவர் ஜார்க்கண்ட் காவல் துறையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது புகார் பதிவு செய்திருந்தார்.

அவரது புகாரில், தன்னையும் தனது பழங்குடியினச் சமூகத்தினரையும் துன்புறுத்தும், அவதூறு செய்யும் நோக்கத்தில் டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்துள்ளனர். பழங்குடியினத்தைச் சாராத அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் அந்தச் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள வழக்கினை எதிர்த்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், அரசாங்க பணிக்காக செயல்படும் அதிகாரிகளுக்கு வன்கொடுமைச் சட்டம் பொருந்தாது என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in