Published : 08 Feb 2018 05:21 PM
Last Updated : 08 Feb 2018 05:21 PM

உ.பி.யில் ஆசிரியர் தாக்கி 4-ம் வகுப்பு மாணவி பலி: சடலத்துடன் பள்ளியின் முன்பு மக்கள் போராட்டம்

 உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் அடித்ததில் நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் சடலத்துடன் மக்கள் பள்ளியை மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பாலியா அருகே உள்ள ரஸ்டா என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, சுப்ரியா என்ற 11 வயது மாணவி 4-ம் வகுப்பு படித்து வந்தார். சுப்ரியா சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி கடந்த 5-ம் தேதி ரஜினி உபாத்யாய் என்ற ஆசிரியர், மாணவியை அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மாணவி பள்ளியிலேயே மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி சுப்ரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் சடலத்துடன் பெற்றோர் மற்றும் மக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸார் விரைந்து வந்து மக்களை சமாதானம் செய்தனர். பள்ளி ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x